மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் - கனமழையிலும் நீடிக்கும் மீட்புப் பணி
கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கனமழைக்கு நடுவே உடல்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி கடும் மழைக்கு இடையேயும் நீடித்து வருகிறது.
Recommended Video
கேரளா மாநிலத்தில் இடுக்கி, வயநாடு, மலப்புரா மாவட்டங்களில் கடும் மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைச்சரிவும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 குடியிருப்பகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரோடு புதைந்து போயினர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் இதுவரை 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன மக்கள், நிலச்சரிவில் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இடுக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80 பேர் கதி என்ன?
இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 17 பேரில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஸ்வரி, கண்ணன், பாரதிராஜா, சிவகாமி, விஷால், ராமலட்சுமி, முருகன், மயில்சாமி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையிலும் இடுக்கியில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய விமானப்படை உதவியை நாடினார். ஆனால் தற்போது மழை பெய்து கொண்டே இருப்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே அங்கு 100 பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருப்பினும் தற்போது மேலும் 100 பேர் இடுக்கி மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.
கனமழை வெள்ளத்திற்கு இடையேயும் மீட்பு பணி நீடிக்கிறது. இரவு முழுவதும் மீட்புப்பணி தொடரும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.