சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை சிறப்பாக நடத்த கேரள அரசு ஆயத்தம்! குடிநீர், பிரசாதம் தாராளம்
சபரிமலை: சபரி மலை மண்டல பூஜைக்கு கேரள அரசு முழு வீச்சில் ஆயத்தமாகி வருகிறது.
சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை புகழ் பெற்றது. இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு சீசன், வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு வரும் 8ம் தேதி முதல்வர் பிணராயி விஜயன் அழைப்புவிடுத்துள்ளார். இந்த வருட மண்டல பூஜையின்போது சுமார் 4 கோடி பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருட உண்டியல் வசூல் ரூ.109 கோடியாக இருந்தது.
மண்டல பூஜைகள் ஏற்பாடு முழு வீச்சில் நடப்பதாகவும், கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியத்திற்கும் அரசுக்கும் மோதல் இல்லை என்றும் கேரள தேவசம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
கோயில் நடை திறக்கும் நாளிலேயே, 40 லட்சம் அரவனை பிரசாதம் ரெடியாக இருக்கும் என்றும், பம்பையிலிருந்து சன்னிதானம் நடுவேயான பகுதியில் 100 குடிநீர் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார். சுகாதார துறை சார்பில் முகாம்கள் ஆங்காங்கு அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.