பலாத்காரம் செய்த சாமியார் ஆணுறுப்பை வெட்டிய கல்லூரி மாணவி.. முதல்வர் பாராட்டால் வெடித்த சர்ச்சை
திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த செயல் சரியா, தவறா என்ற வாத, விவாதம் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா (54). இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும்.
கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளான சட்டக் கல்லூரி மாணவியையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.
வெட்டிய மாணவி
இந்த நிலையில், கணேஷனந்தாவின் ஆணுறுப்பை 23 வயதாகும் அந்த சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்துவிட்டார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேஷனந்தாவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆணுறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர்.
தந்தை உடல்நிலை
போலீசாரிடம் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், தான் 12ம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், பில்லி, சூனியம் போன்றவற்றால் அவருக்கு இப்படி ஆனதாக நம்பி தனது தாயார் கணேஷனந்தாவை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். தனது தந்தை பக்கவாதத்தில் இருந்ததால், தனது தாய், கணேஷனந்தாவுடன் கள்ள உறவு கொண்டதாகவும், அதன்பிறகு தன்னையும் சாமியார் பலாத்காரம் செய்ய தொடங்கியதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் அந்த மாணவி.
முதல்வர் பாராட்டு
இந்த செயலை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார். வீரமான செயல் என்றும், இதற்காக அந்த பெண்ணை பாராட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் சட்டப்படி அந்த மாணவி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதால், இது வாத, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தனது கற்புக்கு ஆபத்து நேரும்போது தற்காத்துக்கொள்ள பெண்களுக்கு அதிகாரம் உள்ளதாக சட்டம் கூறினாலும், இதை சட்டப்படி முதலிலேயே செய்து தடுத்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
முன்கூட்டியே சொல்லியிருக்கலாம்
கேரள சபரிமலை கோயில் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவரும், வலதுசாரி செயல்பாட்டாளருமான ராகுல் ஈஸ்வர் கூறுகையில், மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி இன்னும் வெகு முன்பாகவே அதிகாரிகளை அணுகி உதவி கேட்டிருக்கலாம். சட்டப்படியாக அவர் பாதுகாப்பை பெற்றிருக்கலாம். பல வருடங்களாக அந்த பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஏசுவுடன் யூதாஸ்
மாணவி முன்கூட்டியே சட்ட உதவியை நாடியிருந்தால் குற்றவாளி இன்னும் சில வருடங்கள் முன்பே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இருந்தது. மேலும், இந்த சாமியார் செயலால் ஆசிரமத்திற்கு கெட்ட பெயர் என்பதை ஏற்க முடியாது. ஆசிரமம் இவரது செயலுக்கு ஆதரவு தராது. பிற சாமியார்களுக்கு இவரது செயல்கள் குறித்து தெரியாது. ஏசு நாதருடன்தான் யூதாசும் இருந்துள்ளார். எனவே நல்லவர்களுடன் கெட்டவர்களும் கலந்து இருப்பதால் நல்லவர்களுக்கும் கெட்ட பெயர் வரும் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள்
இதேபோலத்தான் சமூக வலைத்தளங்களிலும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன. மாணவி முன்கூட்டியே சட்ட உதவியை நாடியிருக்க வேண்டும், சட்டத்தை கையில் எடுப்பது சரியான உதாரணம் கிடையாது, யார் வேண்டுமானாலும் இதுபோல செய்துவிட்டு பொய்யாக கூட பழிபோட்டுவிட முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலரோ, நமது சிஸ்டம் சரியில்லை, எனவே சட்ட உதவியை நாடியிருந்தாலும் அந்த பெண்ணுக்கு அது கிடைத்திருக்குமா என்பது தெரியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த சம்பவம் கேரளத்தில் வாத, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.