கேரளா பெண்கள் தற்கொலை விவகாரத்தில் திருப்பம்.. மூவரும் விஷம் அருந்தவில்லை- போஸ்ட்மார்டம் அறிக்கை!
திரிசூர்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்கள் தற்கொலை விவகாரத்தில் மூன்று பேரும் விஷம் அருந்தியதாக போலீசார் கூறியது பொய் என போஸ்ட் மார்டம் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் பத்தினம் திட்டாவின் கொன்னி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேர் கடந்த ஜூலை 9-ந் தேதியில் இருந்து வீடு திரும்பவில்லை. அவர்களது உடைமைகள் மற்றும் பெங்களூரு பூங்காவுக்கான நுழைவு டிக்கெட் ஆகியவை ஒரு ரயிலில் இருந்து மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கேரளா போலீசார் பெங்களூரு சென்று விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் பாலக்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் 3 பெண்களின் உடல்கள் அடிபட்டு இருந்தன. இதில் ஒரு பெண் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காணாமல் போன 3 பேரும்தான் என தெரியவந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம், மூன்று பெண்களின் குடும்பத்தில் பணக் கஷ்டம் என்பதால் மன உளைச்சலில் விஷம் அருந்தி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் எனக் கூறியிருந்தார். மேலும் ஃபேஸ்புக் நட்பால் உருவான பெண்களைப் பார்க்க இந்த பெண்கள் ஓடிப்போனார்கள் என்றும் கூட போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது உயிரிழந்த 2 பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் தவறுதலாகவோ அல்லது விஷம் குடித்தோ ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருக்கும் பெண் கண்விழித்தால்மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.
அதே நேரத்தில் 3 பெண்களும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் ஐ.ஜி. தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாணவிகளின் உறவினர்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.