வரலாறு காணாத மழை பாதிப்பு... கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து
திருவனந்தபுரம்: வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டதால் கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 39 பேர் பலியாகிவிட்டனர். 70 ஆயிரம் பேர் தங்கள் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவித்து வருகின்றனர்.
கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கனமழை பாதிப்பை அடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் கனமழையால் பலர் வீடு மற்றும் உறவுகளை இழந்துள்ளனர். இதனால் வழக்கம் போல் அரசு சார்பில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு இருக்காது. அது சரியாகவும் இருக்காது.
எனவே அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் துயரில் மூழ்கியுள்ள நிலையில் ஓணம் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.