முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவையில்லை..உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு
டெல்லி : முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனுதாக்கல் செய்தது.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கேரள எம்.எல்.ஏ. ஒருவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திடீரென அத்துமீறி அணைப்பகுதியில் நுழைந்து தமிழக அரசின் அதிகாரியை தாக்க முற்பட்டார். இது குறித்து தமிழக அரசு சார்பில் கேரள போலீசாரிடம் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதி அளித்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு முல்லைப்பெரியாறு பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மேலும் ஒரு கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், முல்லைப்பெரியாறு அணை சில தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக மத்திய புலனாய்வு துறையினர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக அரசின் இடைக்கால மனுவின் மீது பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு கேரள அரசு சார்பில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சினையை அரசியலாக்கி வருகிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாண பத்திரம் ஒருதலைப்பட்சமானது.
மத்திய புலனாய்வு துறையின் ரகசிய அறிக்கையை தமிழக அரசு வெளிப்படையாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது ஆட்சேபனைக்கு உரிய செயலாகும். அணையின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான். அந்த மிரட்டலை கேரள போலீசாரால் எதிர்கொள்ள முடியும். அதற்கு தகுந்த பாதுகாப்பை கேரள போலீசார் அளித்து வருகின்றனர்.
அணைப்பகுதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு காவல் நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்படும் இந்த காவல் நிலையத்தில் 124 அதிரடிப்படை கமாண்டோக்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் 24 மணி நேரமும் அணைப்பகுதியை கண்காணிப்பார்கள். எனவே முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவை இல்லை.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.