மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு தலா 600 லிட்டர் டீசல்- கேரளா உதவி
மகாராஷ்டிராவில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தவிக்கும் மீனவர்களுக்கு சொந்த ஊர் திரும்ப தலா 600 லிட்டர் டீசல் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் பரிதாப நிலையை அறிந்து கேரள அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தலா 600 லிட்டர் டீசல் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. உதவிக்கரம் நீட்டிய கேரள அரசுக்கு தமிழக மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயல் கடலுக்குள் சென்ற குமரி மீனவர்களின் படகுகளை திசைக்கொன்றாக சிதறடித்தது. புயல் ஓய்ந்து கடல் அமைதி அடைந்தபோது மாயமான மீனவர்களை தேடும் பணி தொடங்கியது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் மீட்பு படகு, ஹெலிகாப்டர், ராணுவ விமானங்கள் மூலம்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மராட்டியம், கோவாவில் கரை ஒதுங்கினர்
இதில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். சில மீனவர்களின் உடல்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியது. மரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகளுடன் மராட்டியம், கோவா, கர்நாடகா, குஜராத் மாநில கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளனர்.
ரத்தினகிரி துறைமுகம்
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கரை திரும்பிய தகவலை தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்தாலும், இப்போது ஊர் திரும்ப வழியின்றி தவிப்பதாகவும், உணவு, குடிநீருக்கு கூட வழியில்லை என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர்.
கேரளா மாநில அதிகாரிகள்
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கரை சேர்ந்த கேரள மீனவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசினர். கேரளத்தை சேர்ந்த ஒவ்வொரு மீனவருக்கும் அம்மாநில அதிகாரிகள் ரூ.420 உதவி தொகை வழங்கினர். மேலும் படகு ஒன்றுக்கு 600 லிட்டர் வீதம் டீசல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
உணவு, நீரின்றி தவிப்பு
இதனிடையே மராட்டியத்தில் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களுக்கும் கேரள அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு தலா 600 லிட்டர் டீசல் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. டீசல் இல்லாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 8வது நாளாக மீனவர்கள் தவித்தனர். இதனிடையே தமிழக மீனவர்கள் குடும்பத்தினர் கேரளா அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
கேரளா அரசுக்கு நன்றி
தமிழக அரசு அதிகாரிகள் யாரும் வராததால் உணவுக்கும் ரத்தினகிரியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் பரிதாப நிலையை அறிந்து தாமாக முன்வந்து கேரள உதவி அளித்துள்ளது. உதவிக்கரம் நீட்டிய கேரள அரசுக்கு தமிழக மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.