கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின. இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார்.
ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார். இதையடுத்து நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள அரசு குற்றச்சாட்டு
இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது.
3 அடி குறைக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது.
தமிழகம் காரணமல்ல
இந்நிலையில் கேரள அரசின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமல்ல என தெரிவித்துள்ளது.
கேரளாதான் தண்ணீர் திறந்தது
இடுக்கி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகம் தண்ணீர் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே கேரளா தண்ணீர் திறந்துவிட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 டிஎம்சி திறந்தது
இடுக்கி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே கேரளா 14 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது.
குற்றச்சாட்டை ஏற்க முடியாது
முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளில் கேரள அரசு தான் தண்ணீர் திறந்தது. வெள்ளத்திற்கு காரணம் தமிழக அரசுதான் என்ற கேரளாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.