உயிருக்கு உலை வைக்கும் புளூ வேல் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: கேரள அரசு
உயிருக்கு உலை வைக்கும் புளூ வேல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவுள்ளது.
திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் விளையாடப்படும் புளூ வேல் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவுள்ளது.
புளூ வேல் தற்கொலை என்ற ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர்.
50 நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இந்த புளூ வேலில் இருக்கும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் இறுதி சவால் வழங்கப்படும். இந்தியாவிலும் இந்த விபரித விளையாட்டினால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டார். அதனால் நாடு முழுவதும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கேரளா அரசு மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுக்க உள்ளது.
இது குறித்து கேரளாவில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், புளூ வேல் விளையாட்டு மூலம் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெற்றோரிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார் அவர்.