இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி கேரள ஆளுநர் சதாசிவம்?
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கேரள ஆளுநர் சதாசிவத்தின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி: இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக கேரள ஆளுநர் சதாசிவம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக் காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மண்டையை பிய்த்துக் கொள்கின்றன. மேலும் தங்களது வேட்பாளர்தான் ஜனாதிபதி மாளிகையில் குடியேற வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
தேடும் படலம்
தாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரை மாற்று கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காமலும், போட்டியின்றி தேர்வு செய்யவும், ஒரு மித்த வேட்பாளராக இருப்பதிலும் மிகவும் கவனமாக உள்ளன. பாஜக சார்பில் ஜார்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவின் பெயர் அடிபடிகிறது.
எதிர்ப்பு இருக்காது
அவர் பெண் வேட்பாளர் என்பதாலும், பழங்குடியினத்தவர் என்பதாலும் அவருக்கு மாற்று கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காது என்று பாஜக கணக்கு போட்டுள்ளது. அதேபோல் சுமித்ரா மகாஜனின் பெயரும் பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
குழு அமைப்பு
பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் வேட்பாளர் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் சாய்ஸ்
அதே வேளை எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. அவர்களும் வேட்பாளர் தேர்வு குழுவை ஏற்படுத்தியுள்ளனர். அதில் காங்கிரஸ் எம்.பி. யும், ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்னும் ரு வாரத்தில் அறிவிப்பு
இந்நிலையில் தங்கள் தரப்பு வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தங்கள் முடிவை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல் பாஜகவும் தங்கள் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் சதாசிவம்
தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பதவி ஓய்வு பெற்றவர், மேலும் கேரள மாநில ஆளுநராகவும் உள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்தவரான இவர் பாஜக , காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் நட்புணர்வுடன் உள்ளதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. அவரது பெயர் பரிசீலனை செய்யப்படுகிறது.