நில்லுங்க.. நீங்க யார்.. எதற்கு வந்தீர்கள்... விமான பயணிகளுக்கு கேரள அரசு கேள்வி
கோழிக்கோடு: கொரோனோ வைரஸ் பரவுதல் எதிரொலியாக கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத்துறை சார்பாக பயணிகளிடம் 11 கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்நிலையில் கேரள சுகாதார துறை அமைச்சகம் சார்பில் விமான பயணிகளிடம் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பன உள்ளிட்ட வினாக்கள் கேட்கப்படுகின்றன.
பாதிப்பு
உலகையே அச்சுறுத்தி வைத்திருக்கும் ஒற்றை வார்த்தை கொரோனோ. இந்த கொடிய கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே செல்கிறது. பல நாடுகளுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உலகமே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி இன்று இந்தியா உட்பட பல நாடுகளை ஆட்கொண்டு வருகிறது கொரோனோ வைரஸ். இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கொரோனோ பாதிப்பு அதிகமாக உள்ளது.
வினா படிவம்
இதனால் உஷாரான கேரள அரசு தங்கள் மாநிலத்துக்குள் விமானத்தில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது உள்ளூர் விமான பயணிகளாக இருந்தாலும் சரி, வெளியூர் விமான பயணிகளாக இருந்தாலும் சரி, பெயர், வயது, வசிப்பிடம், செல்லக்கூடிய இடம், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து வினா படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த படிவங்களை விமானப் பயணிகள் கட்டாயம் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும் என்ற நடைமுறை கேரளாவில் உள்ளது.
4 ஊர்களில்
கேரளாவை பொறுத்தவரை 4 இடங்களில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. திருவனந்தபுரம், கோழிக்கோடு, கன்னூர், கொச்சின் ஆகிய நான்கு நகரங்களிலும் நாள் ஒன்றுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இதனால் விமான பயணிகளுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக அவர்கள் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
விழிப்புணர்வு
கேரளாவில் விமானப் பயணிகளிடம் பயண சுயவிவரத்தை கூறுமாறு கேள்வி படிவங்கள் அளிப்பது போன்ற நடைமுறை தமிழக விமான நிலையங்களில் இல்லை. இங்கு வெறுமனே சோதனை மட்டுமே நடைபெறுகிறது. கடந்த 28 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்கு சென்றீர்கள் என்றும், எதற்காக எங்கிருந்து கேரளா வருகிறீர்கள் எனவும் அந்த படிவத்தில் வினாக்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.