முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கிய கேரளா: அதிர்ச்சியில் தமிழகம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணியை கேரள அரசு மீண்டும் துவங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரளா அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. அணை வலுவாக இல்லை அதனால் நீர்மட்டத்தை முழுகொள்ளளவுக்கு உயர்த்த முடியாது என்று கேரளா தெரிவித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்துவிட்டது என்று கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு கடந்த 2007ம் ஆண்டு ஈடுபட்டது. புதிய அணை கட்ட ரூ.25 கோடி நிதியை கேரள அரசு ஒதுக்கியது.
இதையடுத்து வல்லக்கடவு செல்லும் பாதையில் 15 இடங்களில் ஆய்வுப் பணியை நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆய்வு பணியை கேரளா நிறுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆய்வுப் பணியை துவங்கியுள்ளது.
ஆய்வுப் பணிக்கு தேவையான பொருட்களை வல்லக்கடவு பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். கேரள நீர் பாசனத்துறை செயற் பொறியாளர் ஜாஸ் டேனியல் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சனிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டது.