சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் - கேரள அரசு அதிரடி அறிவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வழிபாட்டுக்காக பெண்கள் அனுமதிக்கத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உச்சநீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை கோயிலுக்குள் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று 2006ம் ஆண்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்வது அபச்சாரமான காரியம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்றம் கூட 1991-ல் கோயில் நிர்வாகத்தின் இந்த தடையை அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. 1987ல் கன்னட நடிகை ஜெயமாலா கோயிலுக்குள் நுழைந்து விக்கிரகத்தை தொட்டதாக சர்ச்சை எழுந்த போது அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெற்றன. அத்துடன் இதற்கு பரிகாரமாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்கள் மீதான இத் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இத்தடைகள்தான் இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்கலாமே தவிர பாலின அடிப்படையில் கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்க முடியாது. ஆகையால் கேரளாவின் தடை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு பதில் மனு தாக்கல் செய்தது
அந்த மனுவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது என்றும் சபரிமலை கோவில் விவகாரத்தில், பாரம்பரியமாக கடைபிடித்து வரும் மரபுகளை மாற்ற முடியாது என்றும் அந்த பதில் மனுவில் கேரள அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சபரிமலை கோவில் வழக்கில் புதிய மனு ஒன்றை கேரளா இடது சாரி அரசு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வகை பெண்களையும் அனுமதிக்கத் தயார் என்று கூறியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு 2017ம் ஆண்டு பிப்ரவைரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரளா இடதுசாரி அரசு பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்தாலும் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய தேவசம்போர்டு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே இப்போதய கேள்வியாக உள்ளது.