தடைகளை தாண்டும், சுவர்களை உடைத்துச் செல்லும்.. காதல் பற்றி கேரள ஹைகோர்ட் நறுக் கருத்து
திருவனந்தபுரம்: காதல் என்பது தடைகளை தாண்டும், சுவர்களை ஊடுருவும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கண்ணூரைச் சேர்ந்த அனீஸ் ஹமீத் என்பவரும் ஸ்ருதி மெலடா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஸ்ருதியின் பெற்றோரோ, அனீஸ் கடத்திச் சென்று அவரை மதம் மாற்றியதாக போலீசில் புகார்கொடுத்தனர்.
அதேநேரத்தில் மனைவி ஸ்ருதியை அவரது குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டுத் தரக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை அனீஸ் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சிதம்பரேஸ் மற்றும் சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
தள்ளுபடி
ஸ்ருதி தனது கணவரோடு செல்ல அனுமதித்த ஹைகோர்ட், இந்த வழக்கில் தங்களை இணைக்ககோரிய, ஸ்மிருதியின் பெற்றோர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நடத்தும் ஹெல்ப்லைன் அமைப்பு ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அனைத்து கலப்பு திருமணங்களையும் லவ் ஜிகாத் (காதல் புனிதப்போர்) என்ற பார்வையில் பார்க்க கூடாது என ஹைகோர்ட் தெரிவித்தது.
சுவரை உடைக்கும்
தீர்ப்பில், அமெரிக்க சிவில் ரைட்ஸ் போராளியும், கவிஞருமான மயா அன்கேலுவின் வரிகளை சுட்டிக் காட்டினர் நீதிபதிகள். அவர்கள் கூறுகையில், காதலுக்கு தடைகள் கிடையாது. தனது இலக்கை அடைய அது தடைகளை தாண்டும். வேலிகளை அகற்றிச் செல்லும், சுவர்களின் வழியே ஊடுருவும் என்று தெரிவித்தனர்.
கொடுமைப்படுத்தினர்
ஸ்ருதி தைரியமான முடிவை எடுத்துள்ளார் என்றும் நீதிபதிகள் பாராட்டினர். ஸ்ருதி முன்னதாக நீதிபதிகளிடம் கூறுகையில், தன்னை கொச்சியிலுள்ள சிவ சக்தி யோக வித்யா மையத்தில் பெற்றோர் ஒப்படைத்ததாகவும், அங்கு மீண்டும் என்னை இந்துவாக மாறச்சொல்லி கவுன்சலிங் கொடுக்கப்பட்டதாகவும், அப்போது ஆசிரமவாசிகள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
படிக்கும்போது காதல்
ஸ்ருதியியும், ஹமீதும், கண்ணூரிலுள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததும், ஸ்ருதியின் பெற்றோர் அவரை கடத்தி வந்து ஆசிரமத்தில் ஒப்படைத்தனர். அந்த ஆசிரமம் இதுபோல மதம் மாறி திருமணம் செய்தவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதில் பிரபலமானது என்று கூறப்படுகிறது.