நாம மருத்துவ முத்தம் பத்தி பேசிட்டிருக்கோம்.. அங்கே மருத்துவ அலட்சியத்தால் பறிபோனது ஒரு உயிர்!
விபத்தில் சிக்கி போராடிய தமிழருக்கு கேரளா மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பல மணிநேரம் ஆம்புலன்ஸ்சிலேயே போராடி மரணமடைந்துள்ளார்.
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த மருத்துவ முத்தம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் மருத்துவமனைகளின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய தமிழரின் உயிர் பறிபோயுள்ளது
விபத்தில் சிக்கியும், சிகிச்சைக்கு வழியின்றி உயிரை விட்ட நபரின் பெயர் முருகன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கொல்லத்தில் பால்கறந்து விற்பனை செய்து வந்தார்.
கோட்டயம் புறநகர்ப்பகுதியில் முருகன் வசித்து வந்த முருகன், ஞாயிற்றுக் கிழமையன்று தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டருடன் நேருக்கு நேர் மோதி தூக்கி எறியப்பட்டார்.
முருகனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உயிருக்கு போராடிய முருகன்
போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைக்கு முருகன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு உள்ளார். ஆனால் முருகனுடன் யாரும் இல்லை என மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது என காவல்துறையினர் சோகத்துடன் நடந்த சம்பவத்தை விவரிக்கின்றனர்.
சிகிச்சை மறுப்பு
மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மெடிட்ரைனா ஆகிய மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு வென்ட்டிலேட்டர்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், முருகனை கொண்டு சென்றோம்,
அங்கு முருகனின் நிதிநிலைமைகளை ஓட்டுநர் ராஜூவிடம் விசாரித்த மருத்துவமனை நிர்வாகம் உயிர்காப்பு வெண்டிலேட்டர்கள் காலியாக இல்லை அனைத்தும் பயனில் உள்ளன என்று அனுமதிக்க மறுத்துள்ளது. உடனே மெடிட்ரினா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம் அங்கும் உயிர்காப்பு வசதிகள் இல்லை என்று சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மருத்துவமனை
இதற்கிடையில் முருகனுக்கு இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உறுதி செய்த டிரைவர் அங்கிருந்து 72கிமீ தூரத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சை விரட்டினார். ஆனால் இங்கும் வெண்டிலேட்டர் சில மணிநேரம் சென்ற பிறகே கிடைக்கும் என்று கூறப்பட்டது.
7 மணி நேர அலைச்சல்
அதன் பிறகும் விடா முயற்சியுடன் எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைகளுக்கு முருகனைக் கொண்டு சென்றனர். ஆனால் இங்கும் முருகனை அனுமதிக்கவில்லை. பிறகு மீண்டும் 70 கிமீ தொலைவில் உள்ள கொல்லம், பூயாப்பல்லியில் உள்ள அஜீஜியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முருகனை அழைத்து சென்றார் ராஜூ ஆனால் இங்கும் முருகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
உயிரை விட்ட முருகன்
முருகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் இங்கு வந்த போது முருகன் இறந்து விட்டதாக அறிவித்தனர். அதாவது ஞாயிறு இரவு 11 மணிக்கு விபத்து நடந்துள்ளது. திங்கள் காலை 6 மணிக்கு முருகன் இறந்துள்ளார். 7 மணி நேரம் சிகிச்சைக்காகப் போராடியும் எவ்விதப் பயனுமில்லாமல் போனது.
வழக்குப் பதிவு
ஆம்புலன்ஸ் டிரைவர் கொடுத்த புகாரினை அடுத்து கொல்லம் மாவட்ட காவல்துறையினர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏழை என்ற காரணத்தினாலும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தினாலும் ஒரு உயிர் அநியாயமாக பறிபோனது என்பதுதான் சோகம். இங்கே சமூக வலைத்தளங்களில் மருத்துவ முத்தம் பற்றி பேசிச்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவ அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயுள்ளது.