டெல்லி கேரளா பவனில் நாளை முதல் 'பீப் ப்ரை' வழக்கம் போல கிடைக்கும்...
டெல்லி: சர்ச்சைகளைத் தொடர்ந்து டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையால் கேரளாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கேரளா எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே டெல்லி கேரளா பவனில் அம்மாநில தலைமை செயலாளர் ஜிஜி தாம்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளா பவனில் எருமை மாட்டு இறைச்சிதான் பரிமாறப்பட்டது. அதைத்தான் மாட்டிறைச்சி பரிமாறுவதாக கூறுகின்றனர். ஒருபோதும் பசுமாட்டிறைச்சி பரிமாறப்பட்டது இல்லை.
எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கேரளா பவனுக்குள் சிலர் நுழைந்தது குறித்து டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளோம். கேரளா பவனுக்குள் நுழைந்த போலீசார் அனுமதி பெற்று சோதனை நடத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு தாம்சன் கூறினார்.
இதனிடையே டெல்லி கேரளா பவனில் எருமை மாட்டிறைச்சியும் மெனுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ஏ. சம்பத்தோ, எருமை மாட்டிறைச்சியை மீண்டும் மெனுவில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாளை முதல்..
இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.