எங்க ரிசார்ட்டுகளில் வந்து தங்குங்க- காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கேரளா சுற்றுலா துறை அழைப்பு
காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக தங்களது மாநிலத்தில் கேரளா சுற்றுலாத்துறை அழைப்பு.
திருவனந்தபுரம்: கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், ஜேஎடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் மாநிலத்தில் தங்க வருமாறு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடக அரசியல் களம் தகிக்கிறது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
காங்கிரசின் ஆதரவுக் கடிதத்துடன் குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும், துணை முதல்வர் பதவியை காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு 20 அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 16 அமைச்சர்களும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார். பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் ஒருவாரம் அவகாசம் அளித்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 79 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
After the rough and tumble of the #KarnatakaVerdict, we invite all the MLAs to unwind at the safe & beautiful resorts of God's Own Country. #ComeOutAndPlay pic.twitter.com/BthNZQSLCC
— Kerala Tourism (@KeralaTourism) May 15, 2018
இதனால் குதிரை பேரத்துக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ,க்களை தங்கள் பக்கம் இழுத்து பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. முயலும்.
கூவத்தூர் ஃபார்முலா போல் கர்நாடகாவிலும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை கர்நாடக காங்கிரஸ், ஜேஎடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் மாநிலத்துக்கு வருமாறு அழைத்துள்ளது.
கடவுளின் பூமியான கேரளாவில் உள்ள ரிசார்ட்டுகளில் வந்து பத்திரமாக தங்கி இயற்கை அழகை ரசியுங்கள் என அம்மாநில சுற்றுலாத்துறை டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.