கேரள மாநில ஐஎஸ் அமைப்பின் தலைவரை ஆப்கனில் கொன்ற அமெரிக்க படைகள்!
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் தலைவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஆப்கனில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன.
கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷீத் அப்துல்லா. என்ஜினியரிங் படித்த இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து இவர் தனது மனைவி ஆயிஷா என்கிற சோனியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டெஹ்ரான் ஆகிய நாடுகள் வழியாக இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.
இவரது மனைவி ஆயிஷாவும் ஐஎஸ் அமைப்பில் உள்ளார். ஆப்கன் சென்றவுடன் ஐஎஸ் அமைப்பில் சேருமாறு ஏராளமானவர்களுக்கு ஆடியோவில் பிரச்சாரம் செய்து அழைத்தார். இது வரை அவர் 90 ஆடியோக்களை டெலிகிராம் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
தமிழ் பரவுது.. வாழை பழத்தில் ஊசியை ஏற்றி.. கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏஆர் ரகுமான்!
கேரள அமைப்பின் தலைவராக இருந்த ஷாஜீர் மங்களசேரி அப்துல்லா என்பவரை ஆப்கனில் கொன்று ரஷீத் அப்துல்லா அந்த அமைப்பின் தலைவரானார். இந்த நிலையில் எப்போதும் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அப்துல்லா கடந்த இரு மாதங்களாக அமைதியாக இருந்தார்.
இவருக்கு கீழ் 21 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி எழுந்தது. அப்போது பெயர் கூற விரும்பாத ஐஎஸ் அமைப்பின் நிர்வாகி ஒருவர் அப்துல்லா ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இதில் 3 இந்திய சகோதரர்கள், இரு இந்திய பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.