ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 3 பேர் கேரளாவில் கைது.. தென் மாநிலங்களில் குண்டுகள் வைக்க திட்டமிட்டது அம்பலம்
திருவனந்தபுரம்: தென் மாநிலங்களில் பெரும் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மூவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னூர் மாவட்டம், சக்கரக்கல் பகுதியை சேர்ந்த ரஷீத், ரசாக் மற்றும் மிதிலாஜ் ஆகிய மூவரும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். சமீபத்தில், துருக்கி வழியாக, சிரியாவுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முயன்றனர். ஆனால், துருக்கி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உண்மை தெரியவந்ததால் இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
கன்னூர் மாவட்டம் திரும்பிய இவர்களை வலபட்ணம் போலீசார் கைது செய்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், அதை பயன்படுத்தி தென் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான மூவருமே, ஆப்கானிஸ்தானின் இஸ்தான்புல் பகுதியில் சில காலம் தங்கியிருந்ததாக கன்னூர் மாவட்ட துணை எஸ்.பி சதானந்தன் கூறுகிறார். அதேநேரம், இவர்களை கைது செய்த பிறகும்கூட, இன்னும் தங்கள் ஆதரவாளர்கள் வெளியில் இருப்பதாக ஜிகாதி குரூப்புகள் தங்கள் சோஷியல் மீடியா தளங்களில் கூறி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.