கேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்
கொச்சி: கேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. கடனில் வீடு பறிபோகும் நிலையில் இருந்தவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜன் (63). இவருக்கு ரஜனி என்ற மனைவியும், ஆதிரா, விஜில், அக்ஷரா ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
ராஜன் அண்மையில் கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பம்பர் லாட்டரியை வாங்கினார். நேற்று முன்தினம் நடந்த லாட்டரி குழுக்களில் ராஜனுக்கு 12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்த அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட்
திருமணத்துக்கு கடன்
இது தொடர்பாக அவர் கூறுகையில், என் முதல் மகளுக்கு கடந்த 4 வருடம் முன்பு திருமணம் நடந்தது. அதற்காக வீட்டை அடமானம் வைத்து ஒரு வங்கியில் ரூ.2லட்சம் கடன் வாங்கினேன். இதேபோல் வீடு கட்டுவதற்காக 4 வங்கிகளில் 7லட்சம் வரை கடன் வாங்கியிருந்தேன். இதனால் கடனை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டேன்.
12 கோடி பரிசு
இந்நிலையில் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனுக்கான வட்டி திருப்பி செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நேற்று முன்தினம் நோட்டீஸை வங்கியில் வழங்கினார்கள்.அதை வாங்கி கொண்டு வரும் வழியில் தான் கேரள அரசின் லாட்டரி சீட்டை ரூ.300 கொடுத்து வாங்கினேன். அந்த லாட்டரிக்கு 12 கோடி பரிசு விழுந்துள்ளது" என்றார்.
அடிக்கடி வாங்குவதில்லை
இதில், வருமான வரியாக 30 சதவிகிதம் 10 சதவிகித ஏஜன்ட் கமிஷன் பிடித்தம் போக மீதித் தொகை ராஜனுக்கு வழங்கப்படும். ST 269609 என்பதுதான் அந்த அதிர்ஷ்ட லாட்டரியின் எண். ராஜன் அந்த டிக்கெட்டை வங்கியில் டெபாஸிட் செய்துள்ளார். எப்போதாவது லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் தனக்கு இருந்ததாகவும் தொடர்ச்சியாக சீட்டுகளை வாங்க மாட்டேன் என்றும்ராஜன் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் சம்பவங்கள்
கடனில் மூழ்கி வீட்டை இழந்து தெருக்கு வர இருந்தவர் ஒரு நாளில் கோடீஸ்வரன் ஆகி இருக்கிறார் ராஜன். இந்த பரிசு விழுந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக ஏழைகளுக்கு அதிக அளவு லாட்டரியில் பரிசு விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா.. கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க...!