மலையாள பாடகியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
கேரளாவில் நள்ளிரவில் மலையாள பாடகியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கொல்லத்தில் நள்ளிரவில் மலையாளப் பாடகியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் கோயில் திருவிழா நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் பிரபல இன்னிசை குழுவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் பிரபல மலையாள சினிமா பாடகி ஒருவர் கலந்து கொண்டு பாடினார்.
நள்ளிரவு சுமார் 12 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது. பின்னர் பாடகி மற்றும் இன்னிசை குழுவினர் காரில் ஏறி எர்ணாகுளத்திற்கு புறப்பட்டனர். கொல்லம் உமையநல்லூர் சந்திப்பு வந்த போது டீ குடிக்க கார் நிறுத்தப்பட்டது.
இதில் பாடகி மட்டும் காரில் இருக்க மற்றவர்கள் இறங்கி கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் காரின் அருகே இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் பாடகியிடம் நான் ரகசிய போலீஸ் பிரிவு என்றும் நீங்கள் காரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட பாடகி அதிர்ந்தார்.
பின்னர் அவர் திடீரென கார் சாவியை எடுத்து கொண்டு பாடகியை பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாடகி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு டீ குடித்து கொண்டிருந்த இசைக் குழுவினர் ஓடி வந்தனர். தப்பி ஓட முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். சிக்கிய இளைஞருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் நெடும்பனையை சேர்ந்த மானாபுதின் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.