நடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிகரெட் பிடிக்க தடை விதித்த பணிப்பெண்ணிடம் ஆபசமாக நடந்து கொண்ட பயணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி: விமான பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை கழற்றி அசிங்கமான முறையில் நடந்து கொண்ட நபரை டெல்லி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசில் சிக்கிய நபரின் பெயர் அப்துல் ஷாஹித் சம்சுதீன் என்பதாகும். 24 வயதான அந்த நபர் கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர். எலக்ட்ரீசனாக வேரை செய்யும் அவர் வேலை விசயமாக சவுதி சென்றிருந்தார்.
சனிக்கிழமையன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சவுதியில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். நடு வானில் விமானம் பறந்த போது சிகரெட் பற்ற வைக்க லைட்டரை எடுத்தார். அப்போது அங்கு வந்த பணிப்பெண், சிகரெட் பிடிக்க தடை உள்ளதாக கூறினார்.
அப்துல் ஷாஹித்திற்கும் விமான பணிப்பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது திடீரென அப்துல் அந்த அசிங்கமான காரியத்தை செய்தார். பேண்ட் ஜிப்பை கழற்றியதோடு மிக மிக அசிங்கமாக பேசினார். உடனே அந்த பணிப்பெண் சக ஊழியர்களை உதவிக்கு அழைத்து புகார் செய்தார்.
அப்துலை பிடித்து அழைத்து சென்ற ஊழியர்கள், விமானம் டெல்லியில் தரை இறங்கிய உடன் விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உரிய விசாரணை நடத்திய போலீசார், அப்துல் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனாமா வந்தோமா என்றில்லாமல் விமானத்தில் சில்மிஷம் செய்து இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.