மீட்பு ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தினாரா கேரள வாலிபர்.. புதிய சர்ச்சையால் பரபரப்பு
ஆரன்முலா: மீட்பு ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக கேரளா இளைஞர் ஒருவர் சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வரும் நிலையில் தான் செய்யாத தவறுக்கு கிண்டல் செய்யப்படுகிறேன் என்று தெரிவித்தார்.
கேரளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 14 மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்தன. இந்நிலையில் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இன்னும் சிலர் முதல் தளம் அல்லது இரண்டாம் தளம் வரை வெள்ளத்தின் அளவு அதிகரித்த நிலையில் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்கும் பணியிலும் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவதிலும் முப்படையினர் இவர்களுக்கு உதவி செய்தனர்.
மொட்டை மாடி
இந்நிலையில் ஆரன்முலாவை சேர்ந்தவர் ஜோபிமூசா. இவரது வீட்டை சுற்றி ஏராளமான வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் மொட்டை மாடிக்கு குடி பெயர்ந்தனர்.
டிரோல் செய்தல்
இவர் இவரது குடும்பத்துக்கு இன்சுலின் வாங்குவதாக கூறி வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இலவசமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜோபியை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
தவறான தகவல்
இதனால் ஜோபி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினார். கடந்த புதன்கிழமை ஜோபி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில் என்னை பற்றி தவறான தகவல் பரவி வருவதால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன்.
நான் மட்டும் ஹெலிகாப்டருக்குள்
நானும் எனது நண்பரும் நாள் முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். நாங்கள் பணிகளை முடித்து விட்டு திரும்பி சென்றபோது ஹெலிகாப்டர் குழுவினர் நான் உள்ளூர்வாசிகளா என்றும் எங்கு செல்கிறீர்கள் என்றும் கேட்டனர். அந்த குழுவினர் நாங்கள் வசிக்கும் பகுதி குறித்து அறிய முற்படுகிறார்கள் என நினைத்து நான் மட்டும் ஹெலிகாப்டருக்குள் சென்றேன்.
எந்த தவறும் செய்யவில்லை
என் நண்பர் உள்ளே வரவில்லை. நான் மட்டும் திருவனந்தபுரத்தில் இறக்கிவிடப்பட்ட போது அனைத்தும் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர்ந்தேன். இன்சுலின் குறித்து கூறப்பட்ட கதைகள் பொய்யானவை. என்னை தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வீடியோவில் அந்த இளைஞர் பேசியுள்ளார்.