கேரள மக்களை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் ஆணுறை கமெண்ட் போட்டவரை, வேலையை விட்டே தூக்கிய மஸ்கட் நிறுவனம்
Recommended Video
மஸ்கட்: கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் விதமாக கருத்து கூறிய நபரொருவரை மஸ்கட்டிலுள்ள ஹைப்பர் மார்க்கெட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
மஸ்கட்டில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட் என்ற நிறுவனம். இங்கு கேஷியராக பணிபுரிந்து வந்தவர் ராகுல் செரு பலயட்டு. இவர் பேஸ்புக்கில் தெரிவித்த ஒரு கமெண்ட் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு நாப்கின் வழங்குவது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஒருவர் கூறிய கருத்துக்கு பதில் கருத்தாக அங்குள்ள மக்களுக்கு ஆணுறையும் தேவையா என்று கமெண்ட் செய்திருந்தார் ராகுல்.
இந்த கமெண்ட்டுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ராகுல் ஒரு வீடியோ பதிவையும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், நான் மது போதையில் இருந்த போது அவ்வாறு ஒரு கருத்தை பதிவிட்டு விட்டேன், அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இதனால் எனது பணி போகும் சூழ்நிலை உள்ளது. இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை நான் பகிர மாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், லுலு குரூப் நிறுவனம் ராகுலை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுலுக்கு அனுப்பியுள்ள பணிநீக்க கடிதத்தை லுலு குரூப் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அதில் உங்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்குகிறோம். சமூக வலைத்தளத்தில் நீங்கள் தெரிவித்த மிக மோசமான கருத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உங்களது அனைத்து அலுவலக பொறுப்புகளையும் மேலாளரிடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் ஃபைனல் செட்டில்மெண்ட் தொடர்பாக அக்கவுண்ட் துறையை நாடவும். என்று அதில் ஹெச்.ஆர். மேனேஜர் நாசர் சலீம் தெரிவித்துள்ளார்.