'KSRTC' ... போக்குவரத்துக் கழக பெயர் யாருக்கு சொந்தம்? கர்நாடகா- கேரளா இடையே அக்கப்போர்!!
திருவனந்தபுரம்/பெங்களூர்: மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனை வந்து பார்த்திருப்பீங்க.. எல்லை பிரச்சனை வந்து பார்த்திருப்பீங்க.. KSRTC என்ற போக்குவரத்துக் கழக பெயர் யாருக்கும் சொந்தம்னு ஒரு பிரச்சனையை பார்த்திருக்கீங்களா? கர்நாடகாவும் கேரளாவும்தான் இதற்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன..
கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தங்களது அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு "KSRTC" என்றே பெயரிட்டுள்ளன. இரண்டு மாநிலங்களுமே "KSRTC" எங்களுக்கே சொந்தம் என உரிமை கோருகிறது..
தற்போது இது தொடர்பான பஞ்சாயத்து டிரேட்மார்க் பதிவு அலுவலகத்தில் முகாமிட்டுள்ளது. அனேகமாக கேரளாவுக்குத்தான் "KSRTC" கிடைக்கும் எனக் கூறப்படுகிறது...
சிக்கல் வந்தது இப்படித்தான்..
2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் "KSRTC" தங்களுக்கே சொந்தம் என கர்நாடகா அரசு பதிவு செய்தது. இதனால் KSRTC என்ற பெயரை கேரளா பயன்படுத்துவதில் சிக்கல் வந்தது. இதனைத் தொடர்ந்துதான் டிரேட்மார்க் பதிவு அலுவலகத்தில் கேரளா முறையிட்டது.
நாங்கதான் முதலில்..
கேரளாவைப் பொறுத்தவரையில் கேரளா டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (KSRTC) என்பது 1965ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் பார்த்தால் எங்களுக்குத்தானே "KSRTC" சொந்தம் என்கிறது.
கர்நாடகா..
கர்நாடகா டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (KSRTC) என்பது 1974ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. அதனால்தான் எங்களுக்கே சொந்தம் என்கிறது கேரளா...
நாங்கதான் முதலில்..
ஆனால் கர்நாடகாவோ இல்லை இல்லை.. நாங்கதான் முதன் முதலில் பயன்படுத்தினோம்.. பதிவும் செய்தோம்.. அதனால் KSRTC எங்களுக்கே சொந்தம் என்று வாதிடுகிறது.. விரைவில் இந்த பஞ்சாயத்துக்கு தீர்வு வர இருக்கிறது.. அப்போது தெரிந்துவிடும் KSRTC யாருக்கு சொந்தம் என...
இப்படியும் ஒரு அக்கப்போரா?