புத்துயிர் பெற்று வரும் கேரளத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பாம்... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
டெல்லி: கேரளத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளையும் நாளை மறுநாளும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடவுளின் தாய் வீடு என்று கூறப்படும் கேரள மாநிலத்தில் கடந்த மாதம் தொடர்ந்து ஒரு வாரம் பெய்த பேய் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பின. இதையடுத்து அங்குள்ள மொத்த 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தன.
மெல்ல மெல்ல புத்துயிர் பெற்று வரும் கேரள மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 25-ஆம் தேதி மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் அலர்ட்
அத்துடன் பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்கலுக்கு 26-ஆம் தேதியும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 64.4 மி.மீ. முதல் 124.4 மி.மீ வரை பெய்யும்.
பலத்த காற்று
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், கேரளம், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்புண்டு.
இடியுடன் கூடிய மழை
தமிழகத்தில் வெப்பசலனத்தால் மழை பெய்யும்.சில இடங்களில் புழுதி புயலையும் கிளப்பும். இந்த மழை பெரும்பாலான இடங்களில் அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு நீடிக்கும். கேரளத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மழை பெய்யும்
சென்னை மற்றும் தமிழகத்தின் வட பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு, கன்னியாகுமரியும் நெல்லையும் மழையை பெறும். திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.