கேரளாவில் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணியத்தடை!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்கத்தவறுவதில்லை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள் சில பெண்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வகுப்பிற்கு வருகை சரியான சதவீதத்தில் இருக்க வேண்டும் என்றும் இன்டர்னல் மதிப்பெண் அதைப்பொறுத்து வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபார்மல் உடை அணிந்துவரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அதில் மாணவர்கள் ஃபார்மல் உடை அணிந்து, ஷூ போடவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும், சுடிதார் அல்லது புடவை தான் உடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தலை முடியை சரியாக பின்னவேண்டும் என்றும், லெக்கின்ஸ் அணியக்கூடாது, சத்தம் எழுப்பும் ஆபரணங்கள் அணியக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை செய்யப்பட்டது. இது ஒரு புறம் இருக்க பஸ்களில் ஏறி, இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்று கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகின்றனர்.