பார் அனுமதிக்கு லஞ்சம்.. கேரள கலால்துறை அமைச்சர் பாபு ராஜினாமா
திருவனந்தபுரம்: கேரளாவில் மது பார்களுக்காக லஞ்சம் வாங்கிய பிரச்சினையில் அமைச்சர் மாணியைத் தொடர்ந்து மற்றொரு அமைச்சரான பாபுவும் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநில கலால்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.பாபு. இவர் 2014 ஆம் ஆண்டு மதுபார் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை குறைப்பதாக கூறி ரூபாய் 10 கோடி லஞ்சம் கேட்டதாக கேரள மாநில மதுபார் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க செயல் தலைவர் பிஜூ ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார்.
கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன. இதற்கு மதுபார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுபார்களை திறக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில் பார்களின் கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்து மாநில நிதி அமைச்சர் மாணி மற்றும் கலால்துறை அமைச்சர் பாபு ஆகியோர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அமைச்சர் மாணி மற்றும் அமைச்சர் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அமைச்சர் மாணி கடந்த வருடம் பதவி விலகினார். பாபு பதவியில் நீடித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் பாபுவிற்கு எதிரான போராட்டங்களும் வலுவடைந்தன. இதனையடுத்து பாபு இன்று தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.