சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம்: கேரள அமைச்சர் சுரேந்திரன்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது என கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அணைவரையும் அனுமதிக்க கேரளா தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரளா அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பாக விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்துவந்தன.
இந்நிலையில், சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி தீபக் மிஸ்ரா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமை உள்ளது என்றும் கூறினார்.
இதைத்தொடர்து, இந்த வழக்கு தொடர்பாக கேரள அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என உச்ச நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களை அனுமதிக்கும் அரசின் நிலைப்பாட்டுக்கு கேரள தேவசம் போர்டு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.