முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம்... கேரள அரசு திடீர் முடிவு
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக , 124 பேர் கொண்ட சிறப்பு காவல்படையை அம்மாநில அரசு நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாகவும், இது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்தும் விவாதிக்க கேரள அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையில் கூடியது.
கூட்டத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது...
முல்லை பெரியாறு அணையில் தற்போது 22 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக 124 பேர் கொண்ட சிறப்பு காவல் படை அமைப்பது எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிட ரூ.65 லட்சம் நிதி ஒதுக்குவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த வழக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கேரளாவின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.