தனது நிறமும் இல்லை... தந்தையின் சாயலும் இல்லை... பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது
கேரள மாநிலத்தில் தனது நிறம் இல்லை என்பதாலும், தந்தையின் சாயல் இல்லை என்பதாலும் குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம்: கேரள மாநிலத்தில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு தனது நிறமும், தந்தையின் சாயலும் இல்லாததால் அதன் கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம் முறிகாட்டுக்குடி அருகே உள்ள கட்டபனாவில் வசித்து வருபவர் கண்டதின்கார பினு. இவரது மனைவி சந்தியா (28).
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்தது
இந்நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
தந்தையின் சாயல் இல்லை
பிறந்த குழந்தை தனது நிறம் இல்லை என்பதாலும், கணவரின் சாயல் இல்லாததாலும் சந்தியா கவலையில் உள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையை கழுத்தை துணியை கொண்டு நெரித்து கொன்றுவிட்டார்.
கணவரிடம் அழுகை
பின்னர் கணவர் பினு வீட்டுக்கு வந்தவுடன் குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் உள்ளது என்று கூறி அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.
போலீஸ் விசாரணை
அப்போது குழந்தையை சோதனை செய்த மருத்துவர், அதன் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டார். பின்னர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சந்தியா மீது சந்தேகம் அடைந்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.