கேரள பவனில் போலீஸ் நுழைந்ததை கண்டித்து டெல்லியில் கேரள எம்.பிக்கள், பத்திரிகையாளர்கள் தர்ணா!
டெல்லி: டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்.பிக்களும், மலையாள பத்திரிகையாளர்களும் டெல்லியில் தர்ணா நடத்தினர். ஆம் ஆத்மி தலைவர்களும் அதில் பங்கேற்றனர்.
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள பவன் என்ற பெயரில் கேரள அரசின் இல்லம் செயல்படுகிறது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது, இதை நிறுத்தாவிட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் எனக்கூறி ஒரு மிரட்டல் போன் அழைப்பு டெல்லி காவல் நிலையத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால், மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்திவிடுங்கள் என கேட்டு கொண்டனர். இத்தகவல் இன்று வெளியானதும், கேரள அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala MPs protest over #KeralaHouse beef issue, outside Kerala House in Delhi, pic.twitter.com/az6Oc2UGr9
— ANI (@ANI_news) October 27, 2015
இந்த விவகாரத்தை கண்டித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, இதில் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உம்மண் சாண்டிக்கு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்நிலையில், மாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் பினாராய் விஜயன் தலைமையில் இடதுசாரி எம்.பிக்கள், கேரள பவன் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் மலையாள பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
மீண்டும் மாட்டிறைச்சி கறியை, கேரள பவனில் பரிமாற உத்தரவிட வேண்டும் என்றும், கேரள அரசு அமைப்பிற்குள் போலீசார் நுழைந்தது தவறு என்றும் கோஷங்களை எழுப்பினர்.