மூணாறு.. பயங்கர சத்தம்... கழுத்து வரைக்கும் சகதி.. எப்படியோ உயிர் தப்பிச்சேன் - கண்ணீர் கதறல்
மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களில் பலர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். கண் முன்னே பலரும் புதையுண்டு போனதை பதைபதைப்புடன் விவரிக்கின்றனர்.
மூணாறு: விடாம மழை தண்ணி பயங்கரமா வந்துச்சு... திடீர்னு டமால்னு சத்தம் கேட்டுச்சு. அம்மாவையும், பிள்ளைகளையும் இழுத்துக்கிட்டு கழுத்தளவு சகதியில தப்பிச்சு வந்துட்டேன் என்று அச்சத்தோடு விவரிக்க மற்றவரோ பிள்ளைக்குட்டிங்க கதி எல்லாம் என்ன ஆச்சோ என்று கதறுகிறார். நேற்று முதல் மூணாறு ராஜமாலா தேயிலை தோட்டப்பகுதியில் கதறல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மண்ணில் உயிரோடு சமாதியாகி விட்டனர் 80 தேயிலை தோட்டத்தொழிலாளர்கள்.
Recommended Video
திடீரென்று இப்படி நடக்கும் என்று யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். 5 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் கேரளாவின் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மூணாறு கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜமாலா வார்டில் பெட்டிமடா பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து தங்கியிருந்தனர். விடாமல் பெய்து வரும் கனமழையால், தனியார் எஸ்டேட் அமைந்திருக்கும் நேமக்கடா பகுதியில் நேற்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டனர்.
மழையும் வெள்ளமும் சூழ்ந்துள்ளதால் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினரால் போக முடியவில்லை. இருப்பினும் பெரும் சிரமத்திற்கு இடையே மீட்புபணிகள் நடைபெற்றன. இதில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அனைவருமே தமிழர்கள்தான்.
15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்காமல் நூலிலையில் தப்பிய சிலர் நடந்த சம்பவங்களை கண்ணீரோடும் அச்சத்தோடும் விவரித்துள்ளனர்.
கண்ணில் அந்த பயம் இன்னமும் விட்டு விலகவில்லை ஒரு தொழிலாளிக்கு. நடந்த சம்பவத்தை விவரிக்கிறார். ராத்திரியில இருந்தே மழை வேகமாக அடிச்சுச்சு. நடு ராத்திரி பயங்கர சத்தம் கேட்டுச்சு... நிலம் நழுவிச்சு நான் என் பிள்ளைகளையும் அம்மாவையும் கூப்பிட்டுகிட்டு வெளியே ஓடி வந்தேன் அப்படியே வீடு மண்ணுக்குள்ள போயிருச்சு. என் கழுத்து வரைக்கும் சகதி...எப்படி தப்பிச்சு வந்தேன்னு தெரியலை என்று கூறியுள்ளார் ஒரு தொழிலாளி.
அடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள்.. கருப்பு வெள்ளி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கேரளா
அதேபோல மற்றொருவர் நிலச்சரிவில் தனது பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு தவிக்கிறார். திடீர்னு ராத்திரியில கட்டில் எல்லாம் ஆடிச்சு...நான் வெளியே வந்து பார்த்தேன் வெள்ளம் கூடுதலா வந்துச்சு. அப்படியே மண்ணோட மண்ணா எல்லாமே போயிருச்சு. என் பிள்ளைக்குட்டிங்க எல்லாம் என்ன ஆனாங்க தெரியலையே என்று கண்ணீருடன் கதறுகிறார் ஒரு தொழிலாளி.
மண்ணில் புதையுண்டவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 52 பேர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு நடுவேயும் விடிய விடிய மீட்புப்பணி நடைபெற்றது. மண்ணில் புதைந்தவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்றே உறவினர்கள் கதறுகின்றனர்.