4 வருடங்களாக தொடர்ந்து பலாத்காரம்.. கத்தோலிக்க பேராயர் மீது கேரள கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்
Recommended Video
திருவனந்தபுரம்: கத்தோலிக்க பேராயர் மீது கன்னியாஸ்திரி பாலியல் புகார் சுமத்தியுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோமன் கத்தோலிக் ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ முலக்கல் (54). இந்த மறைமாவட்ட நிர்வாகத்திற்கு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குரவிலாங்காட்டில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதை மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார்.
கன்னியாஸ்திரி புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரி தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
4 வருடங்கள் முன்பு
2014ம் ஆண்டு பேராயர் பிராங்கோ முலக்கல் என்னை, கோட்டயம் மாவட்டம் குரவில்லங்காடு பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து பலாத்காரம் செய்தார். இதன்பிறகு என்னை பல்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பேராயரும் புகார்
பேராயரின் செயல்பாடு பற்றி ஏற்கனவே கார்டினலிடம் கன்னியாஸ்திரி புகார் அளித்ததாகவும், ஆனால், அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதால் போலீஸ் துணையை கன்னியாஸ்திரி நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பேராயர் பிராங்கோ முலக்கலும், கன்னியாஸ்திரி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பழிவாங்குவதாக குற்றச்சாட்டு
போலீசில் பேராயர் பிராங்கோ முலக்கல் அளித்துள்ள புகாரில், கன்னியாஸ்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும், பணியிடமாற்றம் செய்ததாகவும், அதனால் அவர் தன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோட்டயம் போலீஸ் எஸ்.பி. ஹரிசங்கரிடம் கேட்டபோது, "பேராயரிடமிருந்து முதலில் புகார் வந்தது. இதன்பிறகு கன்னியாஸ்திரியிடமிருந்து புகார் பெறப்பட்டது. இரு புகார்களையும் விசாரித்து வருகிறோம்" என்றார். பேராயர் புகார் அளித்த 2 நாட்கள் பிறகு கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். கன்னியாஸ்திரி புகார் அளிக்கப்போவதாக கூறியதும் பேராயர் தரப்பு முந்தியதாக கன்னியாஸ்திரி தரப்பு குற்றம்சாட்டுகிறது.
கேரளாவில் தொடரும் பரபரப்பு
இதுகுறித்து கன்னியாஸ்திரி கூறுகையில், இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. பேராயருக்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க எனது முயற்சிகளை தொடருவேன் என்றார். கேரளாவில், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற 2 குழந்தைகளின் தாயாரை பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்த புகார், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரியே புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பாதிரியார்கள் தொடர்பான பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதை புள்ளி விவரங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஆனால் தேவாலய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விஷயம் சமாதானப்படுத்தப்படுவதாக இதுதொடர்பான ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள்.