அங்கியுடன் மருத்துவ நுழைவு தேர்வு எழுத கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு! கேரளாவில் சர்ச்சை
திருவனந்தபுரம்: அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் அங்கி மற்றும் சிலுவை அணிந்து கொண்டு தேர்வு எழுத கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு இன்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 1,000 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே மே மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வின்போது, பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதால், மீண்டும் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் சிபிஎஸ்இ தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது. முறைகேடுகள் நடந்ததை மனதில் வைத்து சிபிஎஸ்இ மிக கடுமையான கட்டுப்பாடுகளை மாணவ, மாணவிகளுக்கு விதித்து இன்றைய தேர்வை நடத்தியது.
மாணவ, மாணவிகள், உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகள் அணிய கூடாது, காதணி, கொலுசு, மோதிரம் போன்ற எந்த ஒரு ஆபரணங்களையும் உடலில் அணிந்திருக்க கூடாது, ஷூக்களுக்கு பதில் செருப்புகளைதான் அணிய வேண்டும், வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உடலில் இருக்க கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதையெதிர்த்து முஸ்லிம் அமைப்பு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், தேர்வு வாரியம் கூறியதை அனைத்து மதத்தினரும் ஏற்று நடக்க வேண்டும் என்று கூறி தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று அந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், கேரள தலைநகர் திருவனந்தபுரம் ஜவகர் சென்ட்டிரல் பள்ளியிலும் இன்று அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை பல மாணவ, மாணவிகள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கன்னியாஸ்திரி செபா என்பவரும் தேர்வு எழுத வந்தார். ஆனால், தலையில் தொப்பி, அங்கி அணிந்து, கழுத்தில் சிலுவையும் மாட்டியபடியே செபா தேர்வு அறைக்குள் நுழைய முற்பட்டார். இதை தேர்வு கண்காணிப்பாளர்கள் தடுத்தனர்.
ஹால்டிக்கெட்டில் ஆடை விதிமுறைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், அங்கியோடு தேர்வு எழுத செல்வது சரியில்லை, அதற்கு அனுமதி தர முடியாது. அங்கியையும், கழுத்தில் மாட்டப்பட்டுள்ள சிலுவையையும் கழற்றிவிட்டு தேர்வெழுதுங்கள் என்று கூறினர். இதை ஏற்க மறுத்த செபா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்துவந்த பள்ளி முதல்வர், தானும் ஒரு கிறிஸ்தவ பெண்தான் என்ற போதிலும், சிபிஎஸ்இ விதிமுறைகளுக்கு மாறாக தன்னால் நடக்க முடியாது என்று கூறியுள்ளார். எனவே, செபாவுக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து செபா நிருபர்களிடம் கூறியது: அங்கியை கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுத வேண்டுமானால், எனக்கு தனியாக ஒரு அறை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறினேன். இதை செய்து தர பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது என்றார்.
சைரோ மலபார் சர்ச் செய்தித்தொடர்பாளர் பவுல் தெலீக்காட் கூறுகையில், "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஒரு கன்னியாஸ்திரிக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சரியல்ல. கத்தோலிக்க சபை எப்போதுமே, ஆடை கட்டுப்பாடு மற்றும் மத குறியீடுகளை அணிவதில் மூர்க்கத்தனத்தை காட்டுவதில்லை. ஆனால், 3 மணி நேரம், மதத்துக்குரிய ஆடையை துறப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தத்து கூறியதை ஏற்க முடியாது. தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்த விஷயம் அது" என்றார்.
இதனிடையே, மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இன்று பெய்த பலத்த மழை காரணமாக தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த விண்ணப்பதாரர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர்கள் அழுது புலம்பியபடியே வெளியேறினர்.