பலாத்காரம் செய்த பிஷப்.. வாடிகன் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதிய கேரள கன்னியாஸ்திரி
திருவனந்தபுரம்: பலாத்கார விவகாரத்தில் வாடிகன் தலைமை தலையிட்டு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.
அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?
பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.