பேர்ட் வியூ வேணும்.. மரத்தில் தொங்கியபடி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்!
மணமக்களை வித்தியாசமான முறையில் போட்டோ எடுத்து பிரபலமாகியுள்ளார் கேரள போட்டோகிராபர் ஒருவர்.
Recommended Video
திருவனந்தபுரம் : திருமண ஆல்பத்திற்காக வித்தியாசமான ஆங்கிளில் மரத்தில் தொங்கியபடி புகைப்படம் எடுத்த கேரள போட்டோகிராபர் இணையத்தில் வைரலாகியுள்ளார்.
காலத்தையும், சம்பவத்தையும் ஆவணப்படுத்துவதில் புகைப்படங்கள் இன்றியமையாதவை. அதிலும், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுபதினங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆண்டுகள் பல உரு்ண்டோடினாலும், மீண்டும் மீண்டும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவை.
அத்தகைய புகைப்படங்களை தற்போது விதவிதமான கோணங்களில் எடுப்பது ஒரு கலையாகி வருகிறது. அந்தவகையில் திருமணம் ஒன்றிற்காக புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் ஒருவர், ஒரே வீடியோவால் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த போட்டோகிராபரின் பெயர் விஷ்ணு. கேரளாவைச் சேர்ந்த அவர், கடந்த 15ம் தேதி துபாயில் மருத்துவ உதவியாளராக பணியாற்றும் ராபர்ட் -ஜோஸ் ஜோடிக்கு திருச்சூரில் நடைபெற்ற திருமணத்தை தனது கேமராவில் பதிவு செய்தார்.
When you wanted to become Spider-Man to fight crime but ended up becoming wedding photographer due to parental pressure. pic.twitter.com/aFtnrFtTf7
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) April 18, 2018
அப்போது திருமண ஆல்பத்தில் வைப்பதற்காக பலவிதமான கோணங்களில் மணமக்களை அவர் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார். அப்போது வித்தியாசமான கோணத்தில் டாப் ஆங்கிளில் மணமக்களைப் படமெடுக்க விரும்பிய விஷ்ணு, மரம் ஒன்றில் தலைகீழாகத் தொங்கியபடி புகைப்படம் எடுத்தார்.
இந்தக் காட்சிகளை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் இது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்த வீடியோ பதிவை இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி போட்டோகிராபர் விஷ்ணு கூறுகையில், “நான் புகைப்படம் எடுக்கும் வீடியோ வைரலாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்னரும் நான் பலமுறை இதுபோல் மரத்தில் தொங்கியபடி புகைப்படம் எடுத்துள்ளேன். பறவையின் பார்வையில் இருந்து இந்த புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே, மரத்தின் தலைகீழாக தொங்கியதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், விஷ்ணுவின் தொழில் ஈடுபாட்டை பாராட்டி வருகின்றனர்.