பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் பலாத்காரம்.. கேரள போலீஸ் அதிரடி.. 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு
திருவனந்தபுரம்: பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவை சேர்ந்த 5 பாதிரியார்கள் மீது கேரள கிரைம் பிராஞ்ச் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அவரின் திருமணத்திற்கு முன்பாக ஒரு தேவாலய பாதிரியாருடன் உறவு ஏற்பட்டிருந்தது.
குழந்தை பெற்ற பிறகு மனது உறுத்தியதால், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியார் ஜாப் மேத்யூ என்பவரிடம் நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்.
பாவ மன்னிப்பு
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறை இருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் அந்த பெண் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். இதை கேட்ட ஜாப் மேத்யூவிற்கு சபலம் தட்டியுள்ளது. இந்த விஷயத்தை உனது கணவரிடமும் ஊர்க்காரர்களிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், என்னுடன் நீ உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜாப் மேத்யூ கூறியுள்ளார்.
வேறு சில பாதிரியார்கள்
வேறு வழியின்றி ஜாப் மேத்யூவுடன் அந்த பெண் உறவு வைத்துள்ளார். இதன்பிறகு, இந்த விஷயத்தை பிற பாதிரியார்கள் சிலருக்கும் மேத்யூ தெரிவித்துள்ளார். இதையடுத்து அதில் 3 பாதிரியார்கள் அந்த பெண்ணை மிரட்டி உறவு கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து துபாயில் வேலை பார்த்த அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கேரளா திரும்பினார். ஊடகங்களுக்கும் பேட்டியளித்தார்.
போலீசாருக்கு நெருக்கடி
ஆனால் போலீசார் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து போலீசார் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கின. தேசிய மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டது. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன், மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதி, விசாரணையை முடுக்க கோரினார்.
4 பாதிரியார்கள்
இதையடுத்து கிரைம் பிராஞ்ச் போலீசார் பாதிரியார்கள், ஜாப் மேத்யூ, ஆப்ரஹாம் வர்கீஸ், ஜான்சன் மேத்யூ மற்றும் ஜெய்சே ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மொத்தம் 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியிருந்தாலும், அந்த பெண் 4 பேர்தான் என கூறினாராம். எனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலாத்காரம் மற்றும் பாலியல் சீண்டல்கள் பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.