கேரளாவில் காணாமல் போன 17 பேருக்கும் ஐஎஸ் தொடர்பு உள்ளதா.. போலீஸ் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த திடீரென மாயமாகி விட்ட 17 ஆண், பெண்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை கேரள போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.
இந்த 17 பேரும் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கேரள போலீஸ் தவிர மத்திய உளவுப் பிரிவும் இதுகுறித்து விசாரித்து வருகிறது.
காணாமல் போயுள்ள 17 பேரில் 10 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள் ஆவர். இவர்களது குடும்பத்தினருடன் காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மாயமானது தொடர்பாக 2 வழக்குகளையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, காணாமல் போன 17 பேரையும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறக் கூடாது என்று முன்னாள் போலீஸ் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.