‘மகாத்மா ஒரு சாதியவாதி’... அருந்ததிராய் பேச்சால் சர்ச்சை - வழக்குப் பதிய கேரள போலீஸ் தீவிரம்
திருவனந்தபுரம்: கேரளப் பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், ‘சாதிய உணர்வை தேசப்பிதா மகாத்மா காந்தி தூண்டியதாக எழுத்தாளர் அருந்ததிராய் பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து கேரள போலீஸ் பரிசீலித்து வருகிறது.
பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கடந்த 17ம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் ‘மகாத்மா அய்யங்காளி இருக்கை' நடத்திய சர்வ தேச கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது'' என பேசியிருந்தார்.
மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்ச்சை...
தேசப்பிதா மகாத்மா காந்தியைப் பற்றிய அருந்ததிராயின் இந்த விமர்சனம் சர்ச்சையை உண்டாக்கியது. அருந்ததிராயின் இப்பேச்சுக்கு கண்டனமும், எதிர்ப்பும் வலுத்தது. காந்திஜியை இழிவுபடுத்திய அருந்ததி ராயின் பேச்சைக் கண்டித்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
புகார்...
தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அருந்ததிராய் பேசியது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் கோட்டயத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் புகார் அளித்தார். மேலும், அருந்ததிராய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியிருந்தார்.
வீடியோ...
அதனைத் தொடர்ந்து அருந்ததிராய் பேசிய பேச்சு அடங்கிய வீடியோவை வழங்குமாறு கேரள பல்கலைக்கழகத்தை திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் கேட்டுள்ளார்.
விசாரணை...
இதுதொடர்பாக நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கமிஷனர் வெங்கடேஷ் அளித்த பேட்டியில், ‘‘இந்த விவகாரம் குறித்து டி.ஜி.பி.யிடம் ஜார்ஜ் என்பவர் அளித்த புகார் மனுவின் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாக, சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தொகுப்பை வழங்குமாறு கேரள பல்கலைக்கழகத்தை கேட்டுள்ளோம்'' என தெரிவித்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கை...
அந்த வீடியோ தொகுப்பு கிடைத்தவுடன் போலீசார் ஆராய்ந்து, காந்திஜி மீது அருந்ததி ராய் அவதூறாகப் பேசி இருந்தது தெரியவந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மகாத்மா காந்தி அறக்கட்டளை...
இந்த விவகாரத்தில் புகாருக்காக காத்திருக்காமல், போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கோட்டயம் பாலா பகுதியை சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் எபி ஜோஸ் தெரிவித்துள்ளார்.
சத்திய சோதனை...
இதற்கிடையே காந்திஜியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை'யை படித்து தெரிந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளை, அருந்ததிராய்க்கு ‘சத்தியசோதனை' புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.