மேற்கு வங்கத்தில் அபாரம்! கேரளாவில் சரித்திரம் படைத்த பாஜக- சட்டசபைக்குள் நுழைந்தது!!
கொல்கத்தா/ திருவனந்தபுரம்: மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும் கேரளாவில் ஒரு தொகுதியிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கேரளா சட்டசபைக்குள் முதல் முறையாக பாஜக கால்பதிக்கிறது.
மேற்கு வங்கம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்து வந்தது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை மமதா பானர்ஜி உருவாக்கினார்.
மமதாவின் விஸ்வரூபத்தால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. தற்போது மமதாவே மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். திரிணாமுல், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளே வென்று வந்த மேற்கு வங்கத்தில் எப்படியும் கால் பதிக்க தொடர்ந்து போராடி வந்தது பாஜக.
பாஜகவின் போராட்டத்துக்கு 2014-ம் ஆண்டு இடைத் தேர்தலில் பலன் கிடைத்தது. இந்தியா- வங்கதேச எல்லையோரத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பசிர்காட் தெற்கு தொகுதிக்கு 2014-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் சாமிக் பட்டர்ஜி போட்டியிட்டு வென்றார். அவர்தான் மேற்கு வங்க சட்டசபைக்குள் நுழைந்த முதல் பாஜக எம்.எல்.ஏ.
தற்போது மேற்கு வங்க பொதுத்தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று புதிய பலத்துடன் சட்டசபையில் அமருகிறது.
கேரளாவில் முதல் வெற்றி
இதேபோல் இடதுசாரிகளும் காங்கிரஸும் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த கேரளாவிலும் நீண்டகாலமாக காலூன்றி விட பாரதிய ஜனதா கட்சி பகீர பிரயத்தனம் மேற்கொண்டது. இதற்காக இடதுசாரிகளின் பெரும் வாக்கு வங்கியான ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளாபள்ளி நடேசனை தனி கட்சி ஒன்றை தொடங்கி வைத்து இந்த தேர்தலில் 3-வது அணியாக களம் கண்டது பாஜக.
பாஜகவின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. கேரளாவின் நேமம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வி. சிவன்குட்டியை எதிர்த்து பாஜக மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் போட்டியிட்டார்.
சிவன்குட்டியை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் ஓ ராஜகோபால். இதன் மூலம் கேரள சட்டசபைக்கு செல்லும் முதல் பாஜக எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜகோபால்.
இதே நேமம் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ராஜகோபால். கடந்த 20 ஆண்டுகாலமாக கேரளாவின் பாஜக முகமாக இருந்து வருகிறவர் ஓ. ராஜகோபால். 1992-2004-ம் ஆண்டுகளில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
ராஜகோபாலுக்கு மாதா அமிர்தானந்தமாய் முழு ஆதரவை தெரிவித்திருந்தார். ராஜகோபாலுக்காக அவரது சீடர்கள் முழு அளவில் இறங்கி தேர்தல் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.