ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்: கேரள பாதிரியார் உருக்கமான வேண்டுகோள்
ஐ.எஸ்.தீவிரவாதிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுன்னல் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் தாமஸ், தன்னைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் உழுன்னல். இவர் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம், ஐ.எஸ். தீவிரவாதிகள் முதியோர் இல்லம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.அதில் அங்கிருந்த 4 இந்திய கன்னியாஸ்திரிகள், 2 ஏமன் பெண்கள், 8 முதியோர்கள் இறந்தனர்.பின்னர் பாதிரியார் தாமஸைப் பிணைக்கைதியாக ஐஎஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
இதனையடுத்து, தன்னை விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பரில் வீடியோ மூலம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர் பேசிய புதிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அதில், 'எனது உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து என்னை விடுவிக்க வேண்டும்' என்று அவர் கண்ணீர்மல்க கோரிக்கைவிடுத்துள்ளார்.