கேரள சிறுமி பலாத்காரம்- 8 மாதங்களுக்குப் பிறகு பாதிரியார் கைது
திருச்சூர்: கேரளாவில் சிறுமி பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் 8 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த கோட்டபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் எட்வின் பிகாரஸ். இந்த தேவாலயத்தில் உள்ள திருச்சபையில் வேலை பார்த்து வந்த ஒரு சிறுமியை எட்வின் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த எட்வின், கோட்டபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாட்டிற்குத் தப்பி சென்றார். பின்னர் கேரளா திரும்பிய அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இதனிடையே எட்வின் தப்ப உதவியதாக அவருடைய உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூலமாக எட்வினை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று போலீசார் கைது செய்தனர்.