வெள்ளத்தில் தத்தளித்த 1 லட்சம் பேரை காப்பாற்றிய கேரளா "ரியல் ஹீரோக்களுக்கு" உற்சாக வரவேற்பு
திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளத்தில் தத்தளித்த ஒரு லட்சம் பேரை காப்பாற்றிய அம்மாநிலத்துக்கு மீனவர்கள் மீட்பு பணிகளை முடித்து கொண்டு சொந்த ஊர் திரும்பினர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்தது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமடைந்தன.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் தங்கள் உடைமைகளையும் வீட்டையும் இழந்துள்ளனர்.
|
மீட்பு பணிகள்
படகில் சென்று மீட்க முடிந்தவர்களை படகின் மூலமும், தண்ணீர் அதிகரித்ததால் வீட்டின் மொட்டை மாடிக்கு தஞ்சமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்றன.
சொந்த ஊர்
மீட்பு பணிகளில் முப்படை வீரர்களும் உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர். தற்போது மழை முடிந்து வெள்ளம் நீர் ஓரளவுக்கு வடிந்த இடங்களில் இருந்து மீனவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 லட்சம் பேர்
இந்த மீனவர்கள் அதிக தண்ணீர் இருந்த பகுதிகளிலும் சீற்றத்தோடு பொங்கி எழுந்த தண்ணீரிலும் தங்கள் உயிரையும் துச்சமாக கருதி மக்களை மீட்டனர். இவர்கள் இதுவரை 1 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.
உதவியை மறக்கவே முடியாது
இவர்களின் உதவிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயனும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துள்ளார். இவர்கள்தான் எங்கள் மாநிலத்தின் ராணுவ வீரர்கள் என்றும், மீனவர்கள் செய்த உதவியை மறக்கவே முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.