கேரளா புதிய சாதனை.. 4வது பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது!
கண்ணூர் : கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள 4வது பன்னாட்டு விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு திறந்துவைத்தார்.
அம்மாநிலத்தில் ஏற்கெனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அபுதாபிக்கு புறப்பட்ட முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,புதிய விமான நிலையத்தால் கேரள மக்கள் மட்டுமல்லாது, அண்டை மாநில மக்களும் பயனடைவார்கள் என்றார்.
சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக எரிமேலியில் புதிய விமான நிலையத்தை அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி பெயர் அழைப்பிதழில் இல்லாததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் விமான நிலைய திறப்பு விழாவை புறக்கணித்தனர். சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பாஜகவினரும் விழாவில் பங்கேற்கவில்லை.