சிறுபான்மை இன அந்தஸ்து கோரும் கேரளா நம்பூதிரி பிராமணர்கள்!
கோட்டயம்: கேரளாவின் நம்பூதி பிராமணர்கள் தங்களுக்கு சிறுபான்மை இன அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய கிளர்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் பல சமூகப் பிரிவினரும் இதேபோல் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நில சீர்திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் நம்பூதிரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தங்களது சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று "யோகஷேம சபா' என்ற கேரள நம்பூதிரி பிராமணர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கோட்டயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறுபான்மையினர் அந்தஸ்தை மாநில அளவில் கணக்கிட வேண்டும். தேசிய அளவில் கணக்கிடக் கூடாது.
அண்மையில் வெளியிடப்பட்ட சாதி, மத கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பில் நம்பூதிரி பிராமணர்களுக்கு உரிய இடங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. நம்பூதிரி பிராமணர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக சனிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையினர் அந்தஸ்து, இடஒதுக்கீட்டு முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கூறினார்.