எனது 75 ஆண்டு அரசியல் வாழ்க்கை வரலாறு தெரியுமா..?: ஆம் ஆத்மிக்கு அச்சுதானந்தன் கேள்வி
திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதல்வரும், சிபிஎம் மூத்த தலைவருமான அச்சுதாதனந்தன், ஆம் ஆத்மியில் இணையுமாறு அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார்.
அச்சுதானந்தன் தற்போது, கேரள எதிர்கட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அச்சுதானந்தனை ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது அவர், ‘எங்கள் கட்சியில் இணைய அச்சுதானந்தனை அழைக்கிறேன். தற்போது நமக்கு உள்ள மிக முக்கியமான எதிரிகள் மதவாதமும், ஊழலும்தான் .நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க நமக்கு இதுதான் சரியான தருணம்' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலின் அழைப்பை நிராகரிக்கும் வகையில் பதிலளித்துள்ளார் அச்சுதானந்தன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-
‘கெஜ்ரிவால் எனது 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றை அறியாமல் உள்ளார். அதனால்தான் அவர் என்னை ஆம் ஆத்மியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.நான் எனது பள்ளி பருவ காலத்திலேயே சிபிஎம் காக உழைக்க ஆரம்பித்து விட்டேன்.நான் எப்போதுமே சிபிஎம் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்பேன், அதற்காகத்தான் உழைப்பேன்' எனத் தெளிவு படுத்தியுள்ளார்.