ஓணத்தின்போது கோர விபத்து.. கேரளாவின் இளம் பெண் கவுன்சிலர் பரிதாப மரணம்
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த மிக மோசமான விபத்து ஒன்றில், கேரளாவின் மிக இளம் வயது பெண் கவுன்சிலர் என்ற பெருமையைப் பெற்ற கோகிலா குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டர் மீது கார் ஒன்று படு வேகமாக வந்து மோதியதில் கோகிலா குமார் கொல்லப்பட்டார்.
கோகிலா குமாருக்கு 22 வயதுதான் ஆகிறது கொல்லம் மாநகராட்சியில் தேவல்லி வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். அவரும் அவரது தந்தை சுனில் குமாரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கார் படு வேகமாக வந்து கோகிலா குமாரின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா குமார் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுனில்குமார் தீயணைப்புத் துறையில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், பிரேக் பிடிக்காதது போல கார் படு வேகமாக வந்தது. பின்னாலிருந்து ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கார் நிற்காமல் போய் விட்டது.
காரில் இருந்தவர்கள் நல்ல குடிபோதையில் இருந்தது போல தெரிகிறது. நிற்காமல் போன கார் மேலும் சில வாகனங்கள் மீது பின்னர் அதுவும் விபத்துக்குள்ளானது.
கொல்லத்தில் உள்ள எஸ்என் கல்லூரியில் பிஏ படித்தவர் கோகிலா. பின்னர் பிஎட் படித்தார். அதன் பின்னர் அவர் பாஜகவில் இணைந்து கொல்லம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோகிலா திருமணமாகாதவர்.
கேரளாவின் மிக இளம் வயது பெண் கவுன்சிலர் என்ற பெருமை பெற்றவர் கோகிலா.