கேரள சபாநாயகரின் செருப்பைக் கழற்றிய உதவியாளர்.. பெரும் சர்ச்சை.. பதவி விலகக் கோரிக்கை
திருவனந்தபுரம்: கேரள சபாநாயகர் என்.சக்தனின் செருப்பை அவரது உதவியாளர் ஒருவர் கழற்றுவது போல புகைப்படம் ஒன்று சமூகவலைதளப்பக்கங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்த அறுவடைத் திருநாள் நிகழ்ச்சியின்போது இந்த சம்பவம் நடந்தது. கேரள மாநில சபாநாயகரான என்.சக்தன் (64), இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது செருப்பை உதவியாளர் கழற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தப் புகைப்படம் வெளியாகியதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட செயலை அனுமதித்து வேடிக்கை பார்த்த சக்தன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வெடித்துள்ளன.
குனியக் கூடாது..
இதுகுறித்து சக்தன் கூறுகையில், "எனக்கு உடல் நல பாதிப்பு உள்ளதால் டாக்டர்கள் குனியக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் எனது செருப்பைக் கழற்றுமாறு பிஜுவிடம் (உதவியாளர்) நான் கூறவில்லை. அவர் எனது உறவினர்தான். அவரேதான் எனது செருப்பைக் கழற்றினார்.
10 லேசர் அறுவைச் சிகிச்சை...
பல வருடமாகவே எனக்கு உடம்பு சரியில்லை. எனது கண்களையும் அது பாதித்துள்ளது. எனது கண்களில் 10 லேசர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளேன். குனியக் கூடாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். வெயிட் தூக்கக் கூடாது என்றும், அதிக நேரம் சூரிய ஒளியபை பார்க்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
திருவிழாவுக்காக...
வழக்கமாக நான் சாதாரண செருப்பு தான் போடுவேன். ஆனால் இந்தத் திருவிழாவின்போது வயலில் நடக்க வேண்டுமே என்பற்காக வேறு மாதிரியான செருப்பைப் போட்டு வந்திருந்தேன்.
உதவியாளரின் உதவி...
அந்த இடத்திற்குச் சென்றபோதுதான் தரைவரிப்பில் நடக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். செருப்பை கழற்ற முயன்றபோது எனது உதவியாளர் அவராகவே முன்வந்து இதைச் செய்தார்" என்றார் சக்தன்.
கவனமாக...
ஆனால் இந்த விழாவின்போது பலமுறை குனிந்து நிமிர்ந்தார் சக்தன். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கவனமாகத் தான் குனிந்தேன்" என அவர் தெரிவித்தார்.
Photo Credit: Madhyamam.com