பினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: கேரள மாநில பாஜகவுக்கு புதிய தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டு 24 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி அம்மாநிலத்தை பரபரக்க வைத்துள்ளார்.
கேரள மாநில பாஜகவில் தலைவர் பதவியிடம் பல மாதங்களாக காலியாக இருந்து வந்தது. இதனால் அம்மாநிலத்தில் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்களை சமாளிக்க முடியாமல் பாஜக தடுமாற்றத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திரன், ஆரம்பத்தையே அதகளப்படுத்தியுள்ளார். மத்திய அரசின் நிதியை கேரள அரசு கொள்ளையடித்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
முடியவில்லை
இந்தியாவில் எங்கு ஆட்சியை பிடித்தாலும் தென் மாநிலங்களில் மட்டும் ஆட்சியை பிடிப்பது பாரதிய ஜனதாவுக்கு குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழகம், கேரளா பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த இரண்டு மாநில மக்களும் மதரீதியிலான அரசியலை மையமாக வைத்து வாக்களிக்க மாட்டார்கள். தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, புதுச்சேரி என எந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களோ, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களோ இல்லை.
தீவிரம்
ஆனால் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமையோ கேரளாவிலும், தமிழகத்திலும் தங்கள் கட்சிக்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வரும் தேர்தலில் உருவாக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வுகள், பணிகள், கூட்டணி விவகாரங்களில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் துணிச்சலாக அரசியல் செய்யக்கூடிய வலிமையான நபர்களை தமிழகம் மற்றும் கேரளாவுக்கு தலைவர்களாக நியமிக்க முடிவெடுத்தார்.
24 மணி நேரம்
இந்நிலையில் தமிழக பாஜகவுக்கு இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படாத நிலையில் கேரள பாஜகவுக்கு நேற்று சுரேந்திரன் என்பவரை புதிய தலைவராக நியமித்தார் நட்டா. சுரேந்திரன் தலைவராக பொறுப்பேற்று 24 மணி நேரம் மட்டுமே ஆகிய நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். இந்த தடாலடி குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பினராயி அரசுக்கு எதிராக விரைவில் கேரளா முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் சுரேந்திரன் கூறியுள்ளார்.
சிறை
கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் மீது இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதோடு, சபரிமலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைதும் செய்யப்பட்டார். இதனிடையே தன் மீது போலீஸ் பதிந்த வழக்குகளுக்கு அரசு தான் காரணம் என நினைத்து, சுரேந்திரன் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்றும், கேரள வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு குறைந்த அளவே நிதி கொடுத்ததாகவும், பொய்யாக ஒரு புகாரை சுரேந்திரன் தெரிவிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூறுகின்றனர்.